Tamilசினிமா

மற்ற மாநில மொழி படங்கள் தமிழ்நாட்டில் வெளியாக கட்டுப்பாடு – நடிகர் ஆர்.கே.சுரேஷ் வேண்டுகோள்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குனர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி, தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோருடன் நடிகர் ராஜ்குமார், நடிகை சுபிக்‌ஷா, இயக்குனர் சுந்தர் பாலு, இசையமைப்பாளர் ராஜ் பிரதாப், ஒளிப்பதிவாளர் சிட்டி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ‘13 ஆண்டுகளாக என்னை இந்த துறையில் ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி. ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சரியான வழிமுறை கிடையாது. இப்படியே சென்றால் இதுபோன்ற படங்கள் விரைவில் தோல்வியடைந்து விடும். படத்திற்கு பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம். தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். இப்போது மஹா மற்றும் மாமனிதன் படங்களை வெளியிடுகிறேன். ஆகையால், திரைப்படங்களை என்னிடம் தாருங்கள் நான் வெளியிட்டு தருகிறேன்.

மற்ற மாநில மொழி படங்கள் 30% மட்டும் தான் வர வேண்டும். பான் இந்தியா படம் என்கிறார்கள். அப்போது அதை ஓடிடியில் வெளியிடுங்கள். திரையரங்கம் நிலைக்க வேண்டுமென்றால் சிறிய படங்கள் அதிகம் வர வேண்டும். அந்த திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக வேண்டும். கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட எத்தனை படங்கள் வெற்றியடைந்துள்ளது என்று கூறுங்கள். புது இயக்குனர்களுக்கு கதைகளை மையப்படுத்தி திரைப்படம் இயக்குங்கள். இது என்னுடைய வேண்டுகோள்’ என்றார்.