Tamilசெய்திகள்

மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வுகள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2024-ம் ஆண்டில் மருத்துவ துறையில் 21 பிரிவுகளில், 3,645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவர் சட்டசபையில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவி மருத்துவர் (பொது) பதவியில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளுநர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர்/தாய்மை துணை செவிலியர் பதவியில் உள்ள 367 இடங்கள், கண் மருத்துவ உதவியாளர் பதவியில் உள்ள 100 இடங்கள், மருந்தாளுநர் (சித்தா) பதவியில் உள்ள 49 இடங்கள், உள்ளிட்ட 21 வகை பதவிகளில் காலியாக உள்ள 3,645 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வுகளிலும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் இடம்பெறும். தேர்வுகளை நெறிப்படுத்தி, வலுவான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒளிவுமறைவற்ற வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.