Tamilசெய்திகள்

மத்திய பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்து – 15 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர். பேருந்து ஒன்று சுமார் நூறு பேருடன் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, நேற்று இரவு ரேவாவில் உள்ள சுஹாகி பஹாரி என்கிற இடத்தில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்ற சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், காயமடைந்தவர்கள் சுஹாகியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் ரேவாவின் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் நவ்நீத் பாசின் கூறுகையில், “பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்றும் அவர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளதும், தொழிலாளர்கள் குழு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று கூறினார்.