Tamilசெய்திகள்

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை அசாம் செல்கிறார் – பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை அசாமின் கவுகாத்திக்கு வருகை தர உள்ளதால், அம்மாநில தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அங்கு அசாம் அரசு பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கிட்டத்தட்ட 45,000 பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கப்படுகிறது.

ஒரு லட்சம் அரசு வேலைகளை வழங்குவதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்க இருக்கும் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியை கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், “வெற்றி பெற்ற 44,703 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார். அதே நாளில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுவார்” என்றார்.

மாநில அரசின் 22765 பதவிகளுக்கான கூடுதல் விளம்பரங்களை இந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசு வெளியிடும் என்றும் அசாம் முதல்வர் கூறினார்.