Tamilசெய்திகள்

மதுரையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலி!

மதுரை மாநகர் விளக்கத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் சரவணன், கண்ணன் ஆகிய காவலர்கள் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கீழவெளி வீதியில் இருசக்கர வாகனம் மூலம் தேநீர் விற்பனை நடைபெற்ற இடத்தில்  கூட்டமாக மக்கள் நின்றிருந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு காவலர்கள் கூறியுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் அவர்கள் இருவரும் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 110 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது.

இடிபாடுகளுக்குள் சிக்கிய காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே  உயிரிழந்தார். மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர், கட்டிட உரிமையாளரான இத்ரிஸ் மற்றும் வாடகைதாரர் உட்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே  மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவிற்கு பழமையான கட்டிடங்கள் உள்ளதாகவும், அதன் உறுதி தன்மை குறித்து மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.