Tamilவிளையாட்டு

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்தத் தொடரில் இன்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்நிலையில், முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா சார்பில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் ஆடினர். ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.

இறுதியில், இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. ஸ்மிரிதி மந்தனா 55 ரன்னும், ஷபாலி வர்மா 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.