Tamilசினிமா

போதைப்பொருள் விவகாரம் – நடிகர் அக்‌ஷய்குமார் வேண்டுகோள்

இந்தி பட உலகினர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி கைதாகி உள்ளார். நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல்பிரீத் சிங், சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசும்போது, “கனத்த இதயத்துடன் இருக்கிறேன். சுஷாந்த் சிங் மரணத்துக்கு பிறகு பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சினிமா துறையில் இருக்கும் சில குறைகளும் வெளியாகி உள்ளது. இவை வலியை ஏற்படுத்துகிறது. போதை மருந்து பிரச்சினை அதிகமாக விவாதிக்கப்படுகிறது. இந்தி பட உலகில் போதைப் பொருள் இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன்.

அதேநேரம் எல்லா நடிகர்களும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று கருதக்கூடாது. அதற்கு வாய்ப்பே இல்லை. போதைப் பொருள் விவகாரத்தில் சட்டமும் கோர்ட்டும் சரியான நடவடிக்கை எடுக்கும். ஆனால் ஒட்டுமொத்த சினிமா துறையையும் போதை பொருளில் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.