Tamilசினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் – புதிய புகைப்படம் வெளியானது

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் “பொன்னியின் செல்வன்” வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையில் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தில் விக்ரம், ஆதித்ய கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், கார்த்தி, வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

தொடர்ச்சியாக இப்படத்தின் அறிவிப்புகளை கொடுத்து வரும் படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு ஐஸ்வர்யா ராய்யின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும்! என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.