பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டா தடை விதித்த கேரள அரசு

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நாடு முழுவதுமான மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50 சதவீத பாதிப்பு பதிவாகி வருகிறது.

இந்தநிலையில், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன. இதனால், மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளது. அதுவே தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது.

இதனால், கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான வி.பி.ராய் கூறியதாவது:-

பண்டிகைகளையொட்டி, உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் 12-ந் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகின்றன. ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடவோ, பெருமளவில் கூடவோ தடை விதிக்கப்படுகிறது.

புதிய பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை 15-ந் தேதி தொடங்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க, நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் தடுப்பூசி போட இயலாதவர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்லலாம்.

இத்தகையவர்களுக்கு கடைக்காரர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools