Tamilசெய்திகள்

பொதுத்தேர்வின் போது ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை – தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ் டூ எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர்,  பிளஸ் டூ பொதுத் தேர்வுகளை எழுத உள்ளனர்.

இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில்,  பணிகள் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்ற அனைத்து அதிகாரிகளும் இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுத்தேர்வு வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது என்றும் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு எழுத நிரந்தர தடைவிதிக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.

பொதுத் தேர்வில் காப்பியடித்தால் சம்பந்தப்பட்ட மாணவர், ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகம் துணை போனால் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.