Tamilசெய்திகள்

பேனா நினைவு நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தாக்கல்

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடல் வளத்தை பாதுகாக்கவும் கடல் அரிப்பைத்தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவும் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ஏற்கனவே மீனவர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.