X

பெண்களுக்கு மாதம் ரூ.1500 – ஆந்தி்ராவில் பா.ஜ.க கூட்டணி தேர்தல் அறிக்கை

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தெலுங்கு தேசம் கட்சி சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.