Tamilசெய்திகள்

புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் – ஜோ பைடன் வலியுறுத்தல்

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து கிடந்தது உலக நாடுகளை
அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஷிய அதிபர் புதின் போர்க் குற்றம் புரிந்திருப்பதாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை ரஷியா தரப்பு மறுத்துள்ளது.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

‘புச்சா நகரில் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தீர்கள். புதின் ஒரு போர்க் குற்றவாளி ஆவார்’ என்று ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறினார்.

உக்ரைன் தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள முக்கிய நகரான புச்சாவில் கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அப்பகுதியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், ரஷியாவின் இந்த நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று கூறினார். மேலும், மேற்கு நாடுகள் ரஷியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத்
தடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.