Tamilசெய்திகள்

பீகாரில் 2 கி.மீ நீள தண்டவாளம் திருடு – 2 ரெயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட்

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் மதுபானி நகரில் பந்தோல் ரெயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரையில் 2 கி.மீ. நீளத்துக்கு சரக்குகளை ஏற்றிச்செல்வதற்காக ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டதும் இந்த தண்டவாள பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த 2 கி.மீ. நீள தண்டவாள பகுதியை மர்ம நபர்கள் சிலர் பல்வேறு காலகட்டங்களில் திருடிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து சமஸ்திபூர் ரெயில்வே வாரியம் தனது 2 ஊழியர்களை சஸ்பெண்டு செய்துள்ளது. இதன்படி, ஜன்ஜார்பூர் அவுட்போஸ்ட் பகுதியின் பொறுப்பாளரான ஸ்ரீனிவாஸ் மற்றும் மதுபானி நகரின் உதவியாளர் பணியில் இருந்த முகேஷ் குமார் சிங் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு துறைசார்ந்த விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, கடந்த நவம்பரில் ரெயில் என்ஜின் ஒன்று திருடு போன சம்பவமும் நடந்து உள்ளது. பீகாரில் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.