Tamilசெய்திகள்

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது – மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்

பிளஸ்-1 தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட் டுள்ளது. தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மொத்த மாணவ-மாணவிகள் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் ஆகும். இதில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவிகளும் (94.99 சதவீதம்), 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்களும் (84.86 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி அடைந்துள்ளார்.
பிளஸ்-1 தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவியர் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 90.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 2020-ல் தேர்ச்சி 96.04 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,605. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி எண்ணிக்கை 103. அறிவியல் பாடத்தில் 93.73 சதவீதம், வணிகவியல் பாடப்பிரிவில் 85.73 சதவீதம், கலைப்பிரிவுகளில் 72.49 சதவீதம் தொழிற்பாட பிரிவுகளில் 76.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இயற்பியல் 94.56 சதவீதம், வேதியியல் 94.42 சதவீதம், உயிரியல் 95.99 சதவீதம், கணிதம் 95.56 சதவீதம், தாவரவியல் 87.98 சதவீதம், விலங்கியல் 87.96 சதவீதம், கணினி அறிவியல் 98.60 சதவீதம், கணக்குப் பதிவியல் 87.91 சதவீதம் தேர்ச்சி சதவீதமாக உள்ளது.

100 சதவிகிதம் மதிப் பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை இயற்பியல் 714, வேதியியல் 138, உயிரியல் 383, கணிதம் 815, தாவரவியல் 3, விலங்கியல் 16, கணினி அறிவியல் 873, வணிகவியல் 821, கணக்கு பதிவியல் 2,163, பொருளியல் 637, கணினி பயன்பாடு-2,186, வணிக கணிதம் மற்றும் புள்ளியல் 291 ஆகும். 4,470 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில் 3,899 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறைவாசிகள் 99 பேர் தேர்வு எழுதியதில் 89 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2020-ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 677. இந்த ஆண்டு தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 376 ஆகும்.