Tamilவிளையாட்டு

பிரேசில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் – அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசிலின் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மர் காயம் அடைந்தார். 79-வது நிமிடத்தில் நெய்மர் பந்தை கடத்தி சென்ற போது எதிரணி வீரர் பறிக்க முயன்றார். அப்போது கால் இடறி நெய்மர் கீழே விழுந்தார். இதில் கணுக்காலில் ஏற்பட்ட வலியால் அவர் துடித்தார். உடனே அணியின் மருத்துவர் களத்துக்குள் வந்து நெய்மரை பரிசோதித்தார். பின்னர் நெய்மர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த அவரது கண்கள் கலங்கி இருந்தன. காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் கூறியதாவது:-

நெய்மரின் காயத்தின் தன்மை குறித்து மதிப்பீட்டை பெற நாங்கள் 24 முதல் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. நாளை (இன்று) காயம் குறித்து புதிய மதிப்பீட்டை பெறுவோம் என்றார்.

பயிற்சியாளர் டைட் கூறும் போது, நெய்மர் உலக கோப்பையில் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என்றார்.