Tamilசினிமா

பிரபுதேவா நடனம் ஆடாமல் நடித்திருக்கும் படம் ‘தேள்’

நடன இயக்குநரும் நடிகருமான ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் படம் ‘தேள்’. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சென்னை பாடியில் உள்ள க்ரீன் சினிமாஸ் திரையரங்கில் ‘தேள்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்ட இந்த நிகழ்வில், பிரபுதேவா உள்ளிட்ட ‘தேள்’ படக்குழுவினர் கலந்துக்கொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

பிரபுதேவா பேசுகையில், ”ஒரு தயாரிப்பாளராக கே.இ.ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவர் உருவாக்கி வெளியிட்டு வரும் படங்கள், பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குநர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளுல் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்.” என்றார்.

இயக்குநர் ஹரிகுமார் பேசுகையில், “தேள் தலைப்பின் காரணம் இன்று அனைவருக்கும் புரிந்திருக்கும். தேள் ஒரு நேரத்தில் 40 குட்டிகளை போடும், அவையனைத்தையும் தன் தோள் மீது வைத்து பாதுகாக்கும். ஆல்கஹால் அதன் மீது ஒரு துளி பட்டாலே இறந்து விடும். மேலும் தேள் கடித்தவர்களுக்கு இதய பாதிப்பு வராது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போல் பல ஒற்றுமைகள் இப்படத்தின் கதையோடு பொருந்திபோகும். இசையமைப்பாளர் சத்யாவும், பாடலாசிரியர்கள் 4 பேரும் இணைந்து படத்தின்  உணர்வுபூர்வமான பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளனர். பாடல் வரிகளில் பிரபுதேவா சார் பல யோசனைகள் சொன்னார். இப்படத்தில் வரும் அம்மா மகன் உறவு அனைவரும் எளிதில் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்வதாக இருக்கும். இப்படத்தில் பங்குபெற்ற நடிகர்கள் இப்படத்தில் நடிக்க முதல் காரணம் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்க வேண்டுமென்பது தான். இரண்டாவது இது ஞானவேல் ராஜா சார் தயாரிப்பு என்பதாகத்தான் இருந்தது. ஈஸ்வரி மேடம் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பார்கள். சம்யுக்தா மிக அழகான நடிப்பை தந்துள்ளார். இந்நேரத்தில் என் தயாரிப்பாளருக்கு, இவ்விழாவிற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா பேசுகையில், “ஸ்டுடியோ கிரீன் மூவிஸ் நிறுவனம் எப்போதுமே கமர்சியலாக வெற்றியடையும் வகையிலான தரமான படங்களை தந்து வருகிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே இப்படம் மிக முக்கியமான படைப்பாக இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு பள்ளிக்காலத்திலிருந்தே பிரபு தேவா சாரின் அதிதீவிர ரசிகன் நான். அவரது சகோதரர் நாகேந்திர பிரசாத்தும் நானும் பள்ளி தோழர்கள், இருவரும் அவர் படத்தை ஒன்றாக தான் பார்ப்போம். ஒரு முறை அவர் வீட்டுக்கு சென்ற போது, பிரபு தேவா சார் ரிகர்சல் செய்வதை வாய் பிளந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேன். பிரபு தேவா சார் தன் வேலையில் கச்சிதமாக இருக்க கூடியவர். அவர் இடத்தில் இருந்து எனக்கு ஒரு சிறு பிரச்சனை கூட வரவில்லை. இயக்குநர் ஹரிகுமார் மிக நேர்த்தியான படைப்பை தந்துள்ளார். சிவகார்த்திகேயன் எப்படி டாக்டர் படத்தில் வசனங்கள் இல்லாமல் அசத்தியுள்ளாரோ, அதே போல் பிரபுதேவா சாரும் மற்ற நடிகர்களும் இப்படத்தில் அசத்தியுள்ளார்கள். யோகி பாபுவுக்கும் நாயகிக்கும் கூட அதிக வசனங்கள் இருந்தது. இப்படம் பார்க்கும் அனைவரும் அவர்களின் அம்மாவை மிஸ் செய்வார்கள். இப்படம் மிகச்சிறந்த குடும்ப திரைப்படமாக இருக்கும்.” என்றார்.

பிரபுதேவா நடிக்கும் படத்தில் அவருடைய நடனத்தை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், இந்த படத்தில் பிரபுதேவா நடனமே ஆடாமல், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறாராம். அவரது நடிப்பு மற்றும் கதாப்பாத்திரம் பெரிதும் பாராட்டு பெறும் வகையில் இருக்கும், என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை நாளை (நவ.18) படக்குழு அறிவிக்க உள்ளது.