Tamilசெய்திகள்

பிரதமர் மோடி நாளை குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

குஜராத் மாநிலத்தில் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேலும், குஜராத்தில் நடைபெற உள்ள ‘குஜராத் கவுரவ் அபியான்’ என்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி குஜராத் செல்ல உள்ளார். நவ்சாரியில் நடைபெற உள்ள ‘குஜராத் கவுரவ் அபியான்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-SPACe) தலைமையகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.