Tamilசெய்திகள்

பிரதமர் மோடியை சந்திக்கும் இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சே

இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே இருக்கிறார். அவரது சகோதரர் பசில் ராஜபக்சே நிதி மந்திரியாக உள்ளார்.

இலங்கையில் தற்போது கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை கடனாக கேட்டுள்ளது.

இந்த நிலையில் பசில் ராஜபக்சே முதல் முறையாக நேற்று டெல்லி வந்தார். கொரோனாவால் இலங்கையில் கடும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இந்தியா வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பசில் ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது அவர் இலங்கைக்கு பொருளாதார உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்வார் என்று கொழும்பில் இருந்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும், சுற்றுலா பரிமாற்றங்களை மேம்படுத்துவதன் மூலமும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கலாம் என்று இலங்கை கருதுகிறது.

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் பசில் ராஜபக்சே பொருளாதார உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்வார். மேலும் இருநாட்டு உறவுகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.

இந்திய சுற்றுப்பயணத்தின்போது பசில் ராஜபக்சே மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசில் ராஜபக்சே தனது முதல் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் சமீபத்தில் சமர்பித்தார். மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் அடுத்தவாரம் இது நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.