Tamilவிளையாட்டு

பிக் பாஸ் வீட்டில் இருப்பது போல இருக்கிறது – ஐபிஎல் பாதுகாப்பு குறித்து ஷிகர் தவான்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகுந்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறையின்படி ஐபில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக பிசிசிஐ பயோ-செக்யூர் வளையத்தை உருவாக்கியுள்ளது. வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டிவ் என முடிவு வந்த பின்னர், இந்த வளையத்திற்குள் செல்வார்கள். அதன்பின் எக்காரணம் கொண்டும் போட்டி முடியும் வரை வெளியில் வர இயலாது. வெளியேறிவிட்டால் மீண்டும் உள்ளே செல்வது கடினம்.

ரசிகர்களை சந்திப்பது, ஓட்டலில் சாப்பிடுவது போன்ற விசயத்தில் பாதுகாப்பை மீற இயலாது. பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர்கள் போட்டியில் இருந்து வெளியேறும் வரை வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாது. அதுபோன்று பயோ செக்யூர் பாதுகாப்பு உள்ளது என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘பயோ-செக்யூர் வளையம் ஒவ்வொருவருக்கும் புதிய விசயம். அதிகமான சவால்களை கொண்டது. ஒவ்வொரு நடவடிக்கையிலும் முன்னேற்றம் காண இது சிறந்த வாய்ப்பு. நான் என்னையே மகிழ்விக்கிறேன். நேர்மறையாக வழியை எடுத்துக் கொண்டேன். தனக்குத்தானே எப்படி பேசிக் கொள்வதில்தான் மொத்தமும் அடங்கியுள்ளது. நீங்கள் உங்களுடைய சிறந்த நண்பர் அல்லது எதிரியாக முடியும்.

உங்களை சுற்றி 10 நபர்களை வைத்திருக்க முடியும். அவர்கள் உங்களுடைய நண்பர்கள் இல்லை என்றால், அதில் ஒரு நன்மையும் இல்லை. நான் சந்தோசமாக ரெஸ்டாரன்ட் செல்வேன். மக்களை பார்ப்பேன். தற்போது அப்படி நடக்காது. ஆகவே. ரசிகர்கள் இதை எவ்வாறு எடுக்கப் போகிறார்கள்?. இது ஐபிஎல் தொடரில் எவ்வாறு செல்ல இருக்கிறது என்பது போன்ற ஏராளமான விசங்கள் உள்ளது. வீரர்கள் சரியாக விளையாட வில்லை என்றால், மற்ற வீரர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் சக வீரர்களுடன் அதே ஓட்டலில் மட்டும் தங்க முடியும். இது ஒவ்வொருவரையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

இது மனரீதியான பரிசோதனைக்கு மிகவும் சிறந்தது. இது ஏறக்குறை பிக் பாஸ் போன்றது’’ என்றார்.