Tamilசெய்திகள்

பா.ஜ.க மகளிரணி தலைவி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மதுரையில் பரபரப்பு

தமிழக பாரதிய ஜனதா மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி. இவரது வீடு மதுரை பங்கஜம் காலனி திருமகள் நகரில் உள்ளது.

வழக்கம் போல் மகாலட்சுமி தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென சத்தம் கேட்டது.

உடனே எதிர்வீட்டில் இருந்த காவலாளி ஓடி வந்து பார்த்தபோது மகாலட்சுமியின் கார் மீது மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

பெட்ரோல் குண்டு காரின் மேல்பகுதியில் பட்டு வெடித்ததால் காரின் சில பகுதிகளில் லேசான சேதம் ஏற்பட்டது.

இது குறித்து தெப்பக் குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.

கார் அருகே கிடந்த 2 பெட்ரோல் பாட்டில்கள் மற்றும் செருப்பு ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து மகாலட்சுமி, தெப்பக்குளம் போலீசில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் பா.ஜனதா மாநில மகளிரணி தலைவியின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *