Tamilசெய்திகள்

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை போட்டி போட்டுக்கொண்டு சந்திக்கும் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. களம் இறங்க தயாராகிவிட்டது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இருவருமே கூட்டணி கட்சியான பா.ஜனதாவின் ஆதரவை நாடுகிறார்கள்.

இதையடுத்து இரு தரப்பும் இன்று பிற்பகலில் போட்டி போட்டு பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை சந்திக்கிறார்கள். மாலை 3 மணிக்கு கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் அண்ணாமலையை சத்திப்பதாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்து இருந்தனர். மாலை 4 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை சந்திக்கிறார்.

அவருடன் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் செல்கிறார்கள். இப்படி போட்டி போட்டு இரு தரப்பும் பா.ஜனதாவின் ஆதரவை கேட்கும் நிலையில் பா.ஜனதா யாருக்கு ஆதரவாக மணி ஒலிக்கப் போகிறது? அல்லது பா.ஜனதா தனி வியூகம் வகுக்கப்போகிறதா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே பா.ஜனதா போட்டியிட முன் வந்தால் ஆதரவு அளிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியதும் அதற்கு பா.ஜனதா மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறியதும் குறிப்பிடத்தக்கது.