Tamilசெய்திகள்

பா.ஜ.க குழுவினர் 21 ஆம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர் – அண்ணாமலை பேட்டி

தமிழக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பார்வையாளர் சிடி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர். காந்தி, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, வேலூர் இப்ராகீம், நடிகை நமீதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கோவையில் இன்று சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இந்த செயற்குழுவிற்கான காரணம் பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சேவை செய்துவிட்டு 10-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது சேவையை கொண்டாடும் விதமாகவும், சாதனைகளை விளக்கும் விதமாகவும் மே 30-ந் தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு மாத காலம் வரை பா. ஜனதா கட்சி அதை கொண்டாட உள்ளது.

இதில் மக்கள் எவ்வாறு முன்னேறி உள்ளார்கள். பெரிய எழுச்சி ஏற்படுத்தியுள்ளது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு பிரதமரின் பங்கு போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இது தொடர்பாக தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இங்கு செயற்குழுவுக்கு வந்துள்ள தலைவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்துள்ளார்கள். நானும் என் ஜல்லிக்கட்டு காளையை கொண்டு வந்துள்ளேன். இதற்கு காரணம் நேற்று நமக்கு சரித்திரம் வாய்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.

பிரதமரின் முழு முயற்சியால் இந்த தீர்ப்பு வந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக ஜல்லிக்கட்டு காளை கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு பக்கம் டாஸ்மாக் என்பது வெள்ளம் போல ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் கள்ளச்சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மதுவிற்கு அடிமையான டாஸ்மாக்கில் மதுவை அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் கள்ளச்சாராயத்தை வாங்குகிறார்கள்.

இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன். நாளை மறுநாள் (21-ந்தேதி) காலை 10 மணிக்கு தமிழக பா.ஜனதா கட்சி குழுவினர், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறோம். அப்போது கள்ளச்சாராய விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளோம்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்க முடியாது. இது தொடர்பாக அவரை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் முயற்சி எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சரை கவர்னர் வலியுறுத்த வேண்டும் என்பது குறித்து எடுத்து கூற உள்ளோம். தி.மு.க. அரசு டாஸ்மாக் மூலமாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது. உடனடியாக கவர்னர் தலையிட்டு பேசி டாஸ்மாக்கை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.