Tamilவிளையாட்டு

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற மனதளவில் தயாராக இல்லை – லியோனல் மெஸ்சி கருத்து

அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி  13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் சேர்ந்தார். 778 ஆட்டங்களில் அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 வெற்றி கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார்.

பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்சி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார்.

மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முன்வரவில்லை.

வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என நிருபர்கள் கூட்டத்தில் மெஸ்சி கண்ணீருடன் தெரிவித்தார்.

என் வாழ்நாளில் இப்படி ஒரு நாள் வரும் என நினைக்கவே இல்லை. இந்த 21 ஆண்டு பயணம் முடிவடைவது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே வார்த்தைகள் வரவில்லை. கிளப்புக்குள் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன். ஆனால் அணிக்கு குட் பை சொல்வேன் என்று நினைத்துப்பார்ககவே இல்லை.

நீண்ட வருடங்களாக இந்த அணிக்காக விளையாடியுள்ளேன். எனக்கு வாழ்க்கையை தந்தது இந்த அணி. ஆனால் தற்போது விடைபெறுவது மிக கடினமாக உள்ளது. நான் மனதளவில் இதற்கு தயாராக இல்லை

என் தலைமையில்  நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. இந்த கிளப்பை விட்டு விலகும் நான் என் வாழ்க்கையை மாற்றும் யதார்த்தத்தை நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும் நாம் அதை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். நான் அறிமுகமான நேரம், என் கனவு நனவாகியது, பின்னர் வந்த அனைத்தும் ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் தொடங்கிய அந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன் என கூறினார்

கூடியிருந்த சக வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர்கள் நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பி மெஸ்சிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியிருந்தாலும், மெஸ்சி இன்னும் வேறு எந்த கிளப்புடனும் ஒப்பந்தம் குறித்து பெரிய அளவில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத்தெரிகிறது.