Tamilவிளையாட்டு

பாதுகாப்பு பிரச்சனைகளை பாகிஸ்தான் சரிசெய்யவில்லை – முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பசித் அலி கருத்து

ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் நடக்கும் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது. எல்லைப் பிரச்சனையால் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் விளையாடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. மேலும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் பொது இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்தும்படி ஐ.சி.சி.யிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. சமீபத்தில் பெஷாவரில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நடந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். எனவே இந்தியா சொல்வது போல் பாதுகாப்பு பிரச்சனைகளை பாகிஸ்தான் சரிசெய்யவில்லை என கவலை தெரிவித்துள்ளார். வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களின் போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடப்பது சந்தேகம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பசித் அலி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு:

வங்காளதேச தொடருக்குப்பின் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. எனவே நாம் பாதுகாப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும். இந்த சுற்றுப்பயணங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி கண்டிப்பாக இங்கு நடக்காது. ஆனால் பலுசிஸ்தானிலும் பெஷாவரிலும் நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து வருகின்றனர். அது ஏன் நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் மட்டுமே பதிலளிக்க முடியும். அது மிகவும் தவறு. இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறு விஷயங்கள் நடந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி நடக்காது.

நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை வெளிநாட்டு அணிகளுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.