Tamilசெய்திகள்

பாட்னா சட்டக் கல்லூரியில் புகுந்து மாணவரை அடித்து கொலை செய்த கும்பல்!

பிகார் தலைநகர் பாட்னாவில் சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்து மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மே 27) பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கு படித்து வந்த ஹர்ஷ் ராஜ் (22) என்ற இளைஞனை கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹர்ஸ் ராஜை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், கல்லூரியில் உள்ள சிசிடிவி கட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்ததில் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர்.

இன்று (மே 28) இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் சந்தன் யாதவ் என்ற மாணவனை கைது செய்த்துள்ளனர். அவரின் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு கல்லூரியில் தாண்டியா நடன நிகழ்வில் ஹர்ஷ ராஜ் குழுவுக்கும் சந்தன் யாதவ் குழுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதிலிருந்து சின்ன சின்ன உரசாலாக இரு குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையே பூதாகாரமாக மாறி மாணவனின் உயிரைப் பறித்தது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து ஹர்ஷ் ராஜின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் போரட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநிலத் தலைநகர் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்தே மாணவன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.