Tamilசெய்திகள்

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறியது – இந்திய ராணுவம் பதிலடி

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுகிறது. எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் நேற்று முழுவதும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்ட்டார் குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம், பதிலடி கொடுத்தது.

இன்று காலையிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. மான்கோட் செக்டாரில் இந்திய நிலைகளை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர் மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.