பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 – இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என சமனிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 57 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 76 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் ஒரு சிக்சர், 12 பவுண்டரி உள்பட 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 31 ரன்னும், ஜோஸ் பட்லர், மார்கன் தலா 21 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

ஆட்ட நாயகன் விருது ஜேசன் ராய்க்கும், தொடர் நாயகன் விருது லிவிங்ஸ்டோனுக்கும்  வழங்கப்பட்டது. ஏற்கனவே ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை 3-0 என இங்கிலாந்து ஒயிட்வாஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools