பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் நாள் முடிவில் இலங்கை 6/315

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் நேற்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 92 ஆக இருந்தபோது, பொறுப்புடன் ஆடிய பெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கருணரத்னே 40 ரன்னில் அவுட்டானார்.

தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100வது டெஸ்ட் போட்டி ஆகும். அவரும் சண்டிமாலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்த நிலையில், மேத்யூஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரை சதமடித்த சண்டிமால் 80 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தன்ஞ்செய டி சில்வா 33 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 2விக்கெட் வீழ்த்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools