Tamilசெய்திகள்

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது

தமிழகத்தில் 2-வது அலை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி மற்றும் கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

*  கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது.

*  மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவை வழங்க வேண்டும்.

*  கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

*  ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

*  பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

*  பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.

* பள்ளி வாகனங்களை கிளம்புவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

* ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* பள்ளியின் கழிவறைக்கு வெளியே, கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்.

* பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

*  கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை.