Tamilசெய்திகள்

பல நாடுகளுடன் இணைந்து இந்தியா நடத்திய கடற்படை பயிற்சியில் சீனா ஊடுருவ முயற்சி

தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே முதல் ஆசியான்-இந்தியா கடற்படை போர் பயிற்சி தென் சீனக்கடலில் கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்தது. இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புனே, வியட்நாம் ஆகிய நாடுகள் இணைந்து ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியை நடத்தின.

இதில் அந்நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்றன. இந்த நிலையில் தென்சீன கடல் பகுதியில் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சியில் சீன கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளன.

வியட்நாமின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியை சீன கப்பல்கள் நெருங்கி வந்தன. ஆனால் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சிகளை தடுக்கவில்லை. சீன விமானங்களும் அப்பகுதியில் பறந்து உள்ளன.

இதன்மூலம் ஆசியான்-இந்தியா போர் பயிற்சியை சீன கண்காணிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறும்போது, ஆசியான்-இந்தியா பயிற்சிகளை பாதிக்கும் அளவிற்கு சீன கப்பல்கள் எங்கும் வர வில்லை. எந்த எச்சரிக்கையும் எழுப்புவதற்கு அவசியம் ஏற்படவில்லை.

ஆனாலும் சீன கப்பல்கள் கவனமாக கண்காணிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் சாங்கி கடற்படை தளத்தில் நடந்த இப்பயிற்சியில் இந்தியாவின் ஐ.என்.எஸ். டெல்லி மற்றும் ஐ.என்.எஸ் சத்புரா கப்பல்கள் பங்கேற்றன.