Tamilசெய்திகள்

பப்ஜி கேம் விளையாடி அம்மா கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை செலவு செய்த சிறுவன்

மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய் விட்டான். இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்காமல் போனதால் சம்பவம் குறித்து எம்.ஐ.டி.சி. போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் பெற்றோரிடம் விசாரித்தனர்.

கடந்த மாதம் முதல் சிறுவன் செல்போனில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடி வந்தான்.

இந்த விளையாட்டிற்காக சிறுவன் தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.10 லட்சத்தை இழந்தான். ஆன்லைன் பரிவர்த்தனை பற்றி அறிந்த சிறுவனின் பெற்றோர் அவனை கண்டித்து உள்ளனர். இதனால் சிறுவன் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு ஓடிசென்றதாக தெரியவந்தது.

போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது அந்தேரி கிழக்கு மகாகாளி குகை அருகே சிறுவன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று சிறுவனை மீட்டனர். பின்னர் அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.