Tamilவிளையாட்டு

பனியின் தாக்கத்தை பொறுத்தே இந்திய அணியின் தேர்வு இருக்கும் – ரவிசாஸ்திரி தகவல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் பனியின் தாக்கம் ஆட்டத்தில் எதிரொலித்தது. இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் இரவே நடக்கிறது. இதனால் பனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பனியின் தாக்கத்தை பொறுத்தே இந்திய அணியின் தேர்வு இருக்கும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆட்டங்களில் பனியின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்து முதலில் பேட்டிங் செய்வதா? அல்லது பந்து வீசுவதா என்பதை முடிவு செய்வோம்.

மேலும் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர் அல்லது வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்குவது என்பது குறித்தும் முடிவு செய்வோம். கடந்த 2 மாதங்களாக இங்கு ஐ.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். எனவே அவர்கள் அதிகளவில் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

பயிற்சி ஆட்டத்தில் எல்லோரும் பந்து வீசலாம். எல்லோரும் பேட்டிங் செய்யலாம். எனவே வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பற்றி ஒரு யோசனை கிடைக்க அது நமக்கு உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.