Tamilசெய்திகள்

பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் பலி

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய நிலைகளின் மீது அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராகேஷ் தோவல் என்ற ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள், 3 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 2 அல்லது 3 பேர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஸ்பெஷல் சர்வீஸ் குரூப்பை சேர்ந்தவர்கள் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.