Tamilசெய்திகள்

பதவி ஏற்கும் போது கையில் சட்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு தான் பதவியேற்போம் – ராகுல் காந்தி திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைதுள்ள நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இன்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது. தற்போது தொடங்கியுள்ள இந்த 18 வது பாராளுமன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் இன்று பதவிப்பிரமாணம் நடக்கிறது. முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினராக உறுதியேற்றுக்கொண்டார். மேலும் புதிய எதிர்க்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களுக்கும் தற்காலிக சபாநாயகரால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது என்பதால் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப்பும், பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு புதிய எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இன்று மாலை வரை புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் முன்னதாக கையில் இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி ராகுல் காந்தி, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் அணிவகுத்தபடி பாராளுமன்றத்துக்குள் சென்றனர் அரசியலமைப்பு சட்டத்தை ஆளும் கட்சி இஷ்டத்துக்கு மாற்றி அமைக்க முடியாது என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடந்தது.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடியும் அமித் சாவும் இந்திய அரசியலமைப்பின் மீது தொடுத்துள்ள தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

எனவே தான் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடி நாங்கள் வந்துள்ளோம். பதவி ஏற்கும் போதும் கையில் சட்டப்புத்தகத்தை ஏந்தியபடியே பதவியேற்போம். இந்திய அரசியலமைப்பை எந்த அதிகார சக்திகளாலும் தொட முடியாது என்று தெரிவித்துள்ளார்.