Tamilசினிமா

படப்பிடிப்பில் விபத்து – நடிகர் நாசருக்கு காயம்

இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாசர் அறிமுகமானார். அதன்பின் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய், பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர் என பண்முகத்தன்மை கொண்டவர்.

இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து படிகட்டுகளில் அவர் இறங்கி வந்த போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் நாசருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் நாசர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.