Tamilவிளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டனாக நியமனம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பஞ்சாப் அணிக்கு கடந்த சீசன்களில் லோகேஷ் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் சென்று விட்டார். அவர் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இதில் அந்த அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பஞ்சாப் அணி நிர்வாகம் மயங்க் அகர்வாலை தக்க வைத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி கேப்டனாக மயங்க் அகர்வால் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், ரபடா உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். இதில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மயங்க் அகர்வால் பஞ்சாப் அணியில் கடந்த சீசன்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் அறிமுகமான மயங்க் அகர்வால் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.