Tamilசெய்திகள்

நீட் குறித்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது தொடர்பாக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 18-வது பாராளுமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் பாராளுமன்றத்தில் நீட் குறித்து விவாதம் நடத்த கவன ஈர்ப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளர்.

அந்த வகையில், மக்களவைக்கு செல்லும் போது பேசிய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “எதிர்கட்சிகளை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களும் நேற்று கூட்டம் நடத்தினோம். அந்த கூட்டத்தில் நீட் விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தினோம். பாராளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாட்டின் இளைஞர்கள் தொடர்பான ஒன்று என்பதால் இதனை முறையாக விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இளைஞர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நீங்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசாங்கமும், எதிர்கட்சிகளும் மாணவர்கள் குறித்த விவகாரத்தை பற்றி ஒன்றாக பேசுகிறார்கள் என்ற தகவல் பாராளுமன்றத்தில் இருந்து செல்ல வேண்டும்,” என்று தெரிவித்தார்.