Tamilசெய்திகள்

நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் – டி.டி.வி.தினகரன் பேட்டி

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நட்சத்திர ரீதியாக தனது 59-வது வயது நிறைவடைந்து 60-வது வயது தொடங்குவதை முன்னிட்டு திருக்கடையூரில் உக்கிர ரத சாந்தி ஹோமங்கள் செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து புகழ் பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-

அ.தி.மு.க. கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல் கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க. பற்றி பேசுவது தேவையற்றது, தேர்தல் சமயத்தில் பேசி கொள்ளலாம், சசிகலா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி எனக்கு தெரியாது. டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். மத்தியில் பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லுகின்ற கூட்டணி அமைக்கப்படும்.

தி.மு.க. ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சந்தித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் மோசமான நிலையை சந்திப்பார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கும், மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது தி.மு.க. விடியல் ஆட்சியின் அவலங்கள் மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தமிழக அரசு உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரி கட்டியதில் ஊழல் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால் தான் தி.மு.க.விற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

எந்த ஊழலாக இருந்தாலும் கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் தீர வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்தது ரூ. 3,000 வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும், தி.மு.க. அமைச்சர்கள் மத்தியில் சண்டை உள்ளதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால் தான் அமைச்சர்களிடையே சண்டை ஏற்படுகிறது. இதுவும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.