Tamilசெய்திகள்

நாளை வாக்கு எண்ணிக்கை – கர்நாடகாவில் 144 தடை உத்தரவு

கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டமாக கடந்த ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே 7-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதாவது முதல்கட்ட தேர்தல் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்பட தென் கர்நாடகத்தில் அமைந்திருக்கும் 14 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தல் சிவமொக்கா உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கும் நடந்தது. இந்த தேர்தல் களத்தில் மொத்தம் 474 வேட்பாளர்கள் உள்ளனர்.

இதில் முக்கியமான தலைவர்களான முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை ஹாவேரியிலும், ஜெகதீஷ் ஷெட்டர் பெலகாவியிலும், குமாரசாமி மண்டியாவிலும், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வாரிலும் போட்டியில் உள்ளனர். இவர்கள் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள்.

மைசூரு தொகுதியில் மன்னர் யதுவீர் உடையார் பா.ஜனதா சார்பில் களத்தில் உள்ளார். பா.ஜனதா தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஆபாச வீடியோ வெளியாகி அரசியலில் புயலை கிளப்பிய பிரஜ்வல் ரேவண்ணா பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கர்நாடகத்தில் 28 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூரு வடக்கு தொகுதி-விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள புனித ஜோசப் இன்டியன் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு மத்தி-மவுண்ட் கார்மல் பி.யூ.கல்லூரி, பெங்களூரு தெற்கு-ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. பி.யூ.கல்லூரி, சிக்பள்ளாப்பூர்-தேவனஹள்ளி நாகராஜா என்ஜினீயரிங் கல்லூரி, கோலார்-கோலார் அரசு முதல் நிலை கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதுபோல் துமகூரு, மண்டியா, மைசூரு , சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், சிக்கோடி தொகுதி, பெலகாவி, விஜயாப்புரா, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரே , சிவமொக்கா, உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா , சித்ரதுர்கா ஆகிய தொகுதி களுக்கு ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. யாதகிரி மாவட்டம் சுராப்புரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் யாதகிரி அரசு பி.யூ.கல்லூரியில் எண்ணப்படுகின்றன.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறு வதால் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட உள்ளது.