Tamilசினிமா

நடிகர் விஷாலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

சென்னை ஐகோர்ட்டில், விஷாலுக்கு எதிராக லைகா படத்தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “நடிகர் விஷால் கடந்த 2016-ம் ஆண்டு மருது படத்தயாரிப்புக்காக மதுரை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடம் ரூ.21.29 கோடி கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பிச்செலுத்த முடியாததால், எங்களிடம் அந்த கடனை அடைக்க அணுகினார்.

அதன்படி நாங்கள் அந்த கடனை அடைத்தோம். இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி எங்களுடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதில், ரூ.21.29 கோடிக்கு 30 சதவீத வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாகவும், துப்பறிவாளன்-2 திரைப்படம் வெளியான பிறகு 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.7 கோடியும், மீதத்தொகையை 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள்ளும் செலுத்தி விடுவதாக உறுதியளித்தார்.

ஆனால், பல முறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் பணத்தை திருப்பித்தரவில்லை. எனவே ரூ.30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137-ஐ வழங்க விஷாலுக்கு உத்தரவிட வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், துப்பறிவாளன்-2 திரைப்படம் வெளியாகும் சமயத்தில் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுப்பதாக விஷால் கூறியுள்ளார். அதை லைகா நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது துப்பறிவாளன்-2 திரைப்படம் வெளியாகவில்லை.

படம் வெளியிடுவதற்கு முன்பே முழு தொகையையும் கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது பொருந்தாது. எனவே, லைகா நிறுவனத்தின் வழக்கை ரூ.5 லட்சம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்