Tamilசினிமா

நடிகர் விவேக்கிற்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்கள்!

பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் கருத்துகளுக்கு அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், சிவாஜி கணேசனின் பாடலை கிண்டலடித்ததாக கூறி நடிகர் விவேக்குக்கு சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சந்திர சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- “பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக் 1960-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று தொடங்கும் அருமையான பாடலை கிண்டலடித் திருக்கிறார்.

மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்து விட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறு இல்லை. ஆனால் ஒரு நடிகரை காக்கா பிடிப்பதற்காக, ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்று கொள்ள முடியாது.

ஏதோ இப்போதுதான் அந்த பாடல் மக்களுக்கே தெரிய வருவது போல கூறும் விவேக், ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற 1960-ம் ஆண்டு வெளிவந்த பாடல் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால், ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறத்தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசியிருக்கிறார் விவேக்.

சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற வசனத்தை பேசி கிண்டலடித்திருந்தார் விவேக். இப்போது சிவாஜி கணேசனின் அருமையான திரைப்பட பாடலை பொதுமேடையில் கிண்டலடித்திருக்கிறார். இதுபோல தொடர்ந்து விவேக் செய்தால் அவருக்கு எதிராக ரசிகர்களை ஒன்று திரட்டி சிவாஜி சமூக நலப்பேரவை போராட்டம் நடத்தும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து நடிகர் விவேக் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- 1960-ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடிய பாடலின் முதல் வரி ‘‘நெஞ்சில் குடி இருக்கும் ’’ அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்துகொள்க.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *