Tamilசினிமா

நடிகர் சிரஞ்சீவிக்கு தெலுங்கான கவர்னர் பாராட்டு

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கி வருகிறார்.

தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பயனாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார் இதில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.

மேலும் சிரஞ்சீவி அறக்கட்டளை சார்பில் இதுவரை 9,30,000 யூனிட் இரத்தம் மற்றும் 4,580 ஜோடி கண்தானம் செய்ததற்காக அப்போது ஆளுநர் பாராட்டு மற்றும் வாழ்த்துத் தெரிவித்தார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து வரும் சிரஞ்சீவியை பின்பற்றி மற்ற முன்னணி நடிகர்களும் ஏழை, எளிய கலைஞர்களுக்கும், மக்களுக்கும் உதவ வேண்டுமென தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.