Tamilசினிமா

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் முன்னேற்றம் – உறவினர் தகவல்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக சினிமா உலகிற்கு சிறிது காலம் விடைகொடுப்பதாக அதில் அவர் கூறியிருந்தது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சஞ்சய் தத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

சஞ்சய் தத் ஒருவகையான நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மும்பையில் சிகிச்சை தொடங்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக இருப்பதாக உணருகிறார். அவர் இன்று (நேற்று) மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் முடிவு மிகச்சிறந்ததாக அமைந்தது. கடவுள் கருணை மற்றும் அனைவரது ஆசியாலும் அவர் நன்றாக உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கடந்த 14-ந் தேதி சஞ்சய் தத் வெளியிட்ட வீடியோ பதிவில், “தற்போது இது எனது வாழ்வின் அச்சுறுத்தல். ஆனால் அதை நான் வெல்வேன். புற்றுநோயில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்“ என்று தெரிவித்து இருந்தார்.

வருகிற நவம்பர் மாதம் ‘கே.ஜி.பி. சாப்டர் 2‘ படத்தில் நடிக்க சஞ்சய் தத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.