X

தோல்வி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்து வந்தார். பணமதிப்பிழப்பையும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்துத்துவா அமைப்புகளை தொடர்புபடுத்தியும் விமர்சித்தார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தார். பிரகாஷ்ராஜை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய நிலையில் பிரகாஷ்ராஜும் அரசியலில் குதித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களம் இறங்கினார். வீதிவீதியாக தீவிர பிரசாரமும் செய்தார். ஆனாலும் சினிமா நட்சத்திர அந்தஸ்து அவருக்கு கைகொடுக்கவில்லை. தோல்வி அடைந்துள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டுவிட்டரில், “என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. மேலும் கேலி, இழிவான சொற்கள், அவமானங்கள் எனது பாதையில் வருகின்றன. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன். இப்போதுதான் கடுமையான பயணம் ஆரம்பித்து உள்ளது. பயணத்தில் என்னோடு இருந்தவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.