Tamilசெய்திகள்

தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை!

தமிழகத்தில் உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. நேற்று வார விடுமுறை என்பதால் மலைச்சிகரத்தில் சுற்றுலா பயணிகள் பலர் இயற்கை அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி தடுப்பை தாண்டி சென்றார். அங்கு நின்ற சுற்றுலா பயணிகள் அபாயகரமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி கூச்சலிட்டனர்.

இதற்கிடையே கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து பள்ளத்தில் குதித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் மலைச்சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் விழுந்த மூதாட்டி படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை பார்த்தனர். அவரது உடலை மீட்டு தொட்டில் கட்டி மலை உச்சிக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில், அவர் கோவை தடாகம் ராகவேந்திரா நகரை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி லீலாவதி(வயது62) என்பது தெரிவந்தது. அவர் தற்கொலை செய்யும் முன்பு ஆதார் கார்டை வைத்து விட்டு பள்ளத்தில் குதித்து உள்ளார். இருப்பினும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.