Tamilசெய்திகள்

தைரியம் இருப்பதால் தான் பா.ஜ.க தனித்து போட்டியிடுகிறது – நடிகை குஷ்பு

பா.ஜனதா நிர்வாகியான நடிகை குஷ்பு மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் யாரும் எந்த வேலையும் செய்வதில்லை என்று மக்கள் பிரதிநிதிகளை மட்டும் குறை சொல்லக்கூடாது. முதலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்து விட்டு குறை மட்டுமே சொல்லக்கூடாது.

யார் ஜெயிக்க வேண்டும் என்று மட்டும் பார்க்கக்கூடாது. யார் ஜெயித்தால் நல்லது செய்வார்கள் என்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.

இது தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் நேரம். எனவே நீங்கள் கேட்கும் அரசியல் விஷயங்களை என்னால் பேச முடியாது.

எங்கள் கட்சிக்கு தைரியம் இருப்பதால் தனித்து போட்டியிடுகிறது. வெற்றி வாய்ப்பை பற்றி அப்புறம் பார்க்கலாம்.

3-வது இடமா? 2-வது இடமா? என்பதை பற்றியெல்லாம் கருத்து சொல்ல முடியாது.

ஏற்கனவே இப்படி பேசி பேசியே எங்கள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சட்டமன்றத்துக்கு சென்று விட்டார்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.