Tamilசினிமா

துருவ் விக்ரம் படத்தை தயாரிக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்

விக்ரம் மகன் துருவ், கடந்த ஆண்டு வெளியான ‘ஆதித்ய வர்மா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் அடுத்ததாக ‘சீயான் 60’ படத்தில் தந்தை விக்ரமுடன் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதேபோல் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் மூன்றாவது படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார்.

இவர் ஏற்கனவே ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். தற்போது தனுஷை வைத்து ‘கர்ணன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு துருவ்விக்ரம் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் நடிக்கும் படத்தின் கதை விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.