Tamilசெய்திகள்

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை – தூத்துக்குடி மக்களை எச்சரித்த கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வீட்டில் மின் சாதனங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். வெளியில் செல்லும் போது மின் கம்பிகளோ, கம்பங்களோ சரிந்த நிலையில் உள்ளனவா, குழிகள் ஏதும் உள்ளனவா என்பதை பார்த்து கவனமாக செல்ல வேண்டும்.

பழுதடைந்த கட்டிடங்களில் மழைக்கு ஒதுங்க வேண்டாம். இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல நேரிட்டால் விஷ பூச்சிகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளும் வகையில் கையில் டார்ச் லைட் மற்றும் கைத்தடியுடன் செல்ல வேண்டும்.

இடி மின்னலின் போது வெட்டவெளி, பசுமையான மரங்கள் மற்றும் கட்டிடங்களின் அருகில் நிற்க வேண்டாம். ஆறு, வாய்க்கால், குளம் மற்றும் குட்டைகளில் குளிக்க செல்ல வேண்டாம். குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். காய்ச்சல், இருமல், ஜலதோஷம் மற்றும் வயிற்றுபோக்கு போன்றவை தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.

பேரிடர் தொடர்பான அவசர தேவைகளுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077, தொலைபேசி எண்: 0461-2340101 மற்றும் வாட்ஸ் அப் எண் : 94864 54714 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.