Tamilசினிமா

தி லெஜண்ட் படத்தை இணையத்தில் வெளியிட நீதிமன்றம் தடை

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனிடையே ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு 1,262 இணையதளங்கள் மற்றும் இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.